ADDED : டிச 02, 2025 04:56 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து டிச.,9 முதல் 10 வரை லோக்சபாவில் விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் பதிலளிக்க உள்ளார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. அவையின் முதல் நாளான நேற்று( டிச.,01) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் தொடக்கம் முதலே ஒத்தி வைக்கப்பட்ட இரு அவைகளும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
2ம் நாளான இன்றும் பார்லிமென்ட் கூடிய போது, எஸ்ஐஆர் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஒத்திவைப்பு நோட்டீசும் அளித்து இருந்தனர். அனுமதி மறுக்கவே அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடந்தது.
இதன் பின்னர், வந்தே மாதம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு லோக்சபாவில் வரும் 8 ம் தேதி விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
மறுநாள் 9 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடக்கும். இதற்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுநாள் ( டிச.,10) மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் விவாதத்துக்கு பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

