ஆன்லைன் கேம்' மோசடியில் சிக்கி ரூ. 1.36 கோடியை இழந்த இளைஞர்; மோசடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆன்லைன் கேம்' மோசடியில் சிக்கி ரூ. 1.36 கோடியை இழந்த இளைஞர்; மோசடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ADDED : ஜூலை 05, 2026 07:11 PM

தானே: மஹாராஷ்டிராவில் 'ஆன்லைன் கேம்' விளையாடுவது தொடர்பாக ஏமாற்றி, இளைஞரிடம் இருந்து, 1.36 கோடி ரூபாயை பறித்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த 26 வயது இளைஞர், சமூக வலைதளங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2024, அக்டோபரில் சமூக வலைதளம் வாயிலாக இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர். இதற்கு சில ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதை நம்பி, மர்ம நபர்கள் கூறிய இணையதளம் வாயிலாக பல்வேறு வங்கி கணக்குகளில் அவ்வப்போது இளைஞர் முதலீடு செய்து வந்தார். செலுத்திய தொகை இரட்டிப்பாக வரும் என கூறிய சூழலில், அதுபோல் எந்த பணமும் வராததால் அது குறித்து இளைஞர் கேள்வியும் எழுப்பினார். ஒவ்வொரு முறையும், இந்த தொகை செலுத்தினால், லாபம் வரும் எனக் கூறி, இளைஞரிடம் இருந்து மர்ம கும்பல் பணத்தை சுருட்டியது.
கடந்த 30ம் தேதி, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திய இளைஞர், பணம் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்தார். இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளாக பணம் செலுத்தியுள்ளார்.இது குறித்து கேள்வி எழுப்பிய போது, இளைஞரின் தொடர்பை மோசடி கும்பல் துண்டித்தது. இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை இளைஞர் உணர்ந்தார். மொத்தம் 1.36 கோடி ரூபாயை இழந்ததை அடுத்து, மோசடி தொடர்பாக தானே போலீசில் அவர் புகாரளித்தார்.
இது தொடர்பாக, மூன்று இணையதளங்கள் மற்றும் பல்வேறு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் உட்பட ஏழு தரப்பினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதுடன், மோசடி கும்பலையும் தேடி வருகின்றனர்.
