கோவில் நிலத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டும் மசோதாவை அனுமதிக்கக் கூடாது: ஹிந்து முன்னணி
கோவில் நிலத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டும் மசோதாவை அனுமதிக்கக் கூடாது: ஹிந்து முன்னணி
UPDATED : டிச 09, 2025 09:58 AM
ADDED : டிச 09, 2025 09:59 AM
சென்னை:
'கோவில் நிலத்தில், கல்வி நிறுவனங்கள் கட்ட அனுமதிக்கும் மசோதாவுக்கு, அனுமதி தரக்கூடாது' என, கவர்னர் ரவியிடம், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை கிண்டி லோக் பவனில், நேற்று கவர்னர் ரவியை, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பொதுச்செயலர் கிஷோர்குமார், அமைப்பாளர் ராஜேஷ், செய்தி தொடர்பாளர் இளங்கோவன், செயலர் சேவுகன், தென்பாரத அமைப்பாளர் பக்தவத்சலம், ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, கவர்னரிடம் அவர்கள் அளித்த மனு:
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், கோவில் நிதியில், கல்வி நிறுவனங்கள், இசைப் பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் கட்டுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை, ஒட்டுமொத்தமாக அழிக்கும் உள்நோக்கம் கொண்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்கள், பராமரிப்பின்றி உள்ளன. இந்த மசோதா சட்டமானால், கோவில் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோவில் நிதியில் ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத் துாணில், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து, கவர்னர் ரவி கேட்டார். உயர் நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசு மதிக்கவில்லை; நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில், தமிழக அரசு செயல்படுவது, அரசமைப்பு சட்டத்தின் மாண்பை சீர்குலைக்கும் செயல். இதனால் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம், மக்களுக்கு ஏற்படும் என, கவர்னரிடம் எடுத்து கூறினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

