220 பேர் கைது; 444 சிலைகள் மீட்பு: கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தகவல்
220 பேர் கைது; 444 சிலைகள் மீட்பு: கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தகவல்
ADDED : நவ 13, 2025 12:52 AM

சென்னை: ''ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 12 சிலைகள் உட்பட, 444 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன,'' என, சிலைகள் திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறினார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை மீட்பது தொடர்பாக, கடந்த ஆண்டு சென்னையில், அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் இணைந்து, ஐந்து நாட்கள் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில், நேபாள நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய, மாநில தொல்லியல் துறையினர், அருங்காட்சியகம், சுங்கத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
'இன்டர்போல்' வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்பதற்கு, இக்கருத்தரங்கு பெரிதும் உதவியாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சிலைகள் திருட்டு, கடத்தல் தொடர்பாக, 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 62 வழக்குகளில், 220 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்ற வழக்குகள் தீவிர விசாரணையில் உள்ளன. இதுவரை, தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 12 சிலைகள் உட்பட, 444 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன.
அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில், 2005ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 'இன்டர்போல்' போலீசார் உதவியுடன், சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தரப்பட்டு, ஜாமினில் வெளிவர முடியாதபடி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிலை தடுப்பு பிரிவு சிலைகளை பாதுகாக்க, மாநிலம் முழுதும் கோவில்கள் இருக்கும் பகுதிகளில், மாவட்ட போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் தொடர்பில் உள்ளனர்.
காணாமல் போன, வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும், அன்பில் செப்பேடு குறித்து, சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

