பீஹாரின் இளம் வயது எம்எல்ஏ; மைதிலி தாகூருக்கு குவியும் வாழ்த்து
பீஹாரின் இளம் வயது எம்எல்ஏ; மைதிலி தாகூருக்கு குவியும் வாழ்த்து
ADDED : நவ 14, 2025 07:13 PM

பாட்னா: பீஹார் சட்டசபையின் இளம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மைதிலி தாகூர். இவரின் வயது 25. நாட்டுப்புற பாடகியான மைதிலி தாகூர், பாஜவில் இணைந்த ஒரே நாளில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்.
பீஹார் சட்டசபை தேர்தல் அரசியலில் இளம் வேட்பாளராக அறியப்பட்டவர் மைதிலி தாகூர். 25 வயது நிரம்பிய இவர், சமூக வலைதளத்தில் பிரபலமானவர். இப்போது அலி நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகி உள்ளார்.
இதன் மூலம் பீஹார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ராவை எதிர்த்து களம் கண்டார்.
மாநிலத்தில் பிரபலமாக அறியப்பட்ட இவர், வெற்றி பெறுவாரா என்று பலரும் கூறி வந்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, பாஜ எம்எல்ஏவாக வெற்றி பெற்று இருக்கிறார். அலிநகர் தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதியாகும்.
கட்சியில் சேர்ந்தார், மறு நாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது எம்எல்ஏ என்ற அடையாளம் கொண்ட மைதிலி தாகூரின் பயணம், பீஹார் மாநில அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.
பீஹார் தேர்தலில் ஒரு வேட்பாளரின் சராசரி என்பது 51 ஆக உள்ளது. மைதிலி தாகூருக்கு முன்பாக மிகவும் குறைந்த வயதில் எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டவர் தவ்சீவ் ஆலம், இவர் ஒரு சுயேட்சை வேட்பாளர். 2005ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அதன் பின்னர் தேஜஸ்வி யாதவ் தமது 26வது வயதில் 2015ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வேட்பாளராக களம் கண்டார்.
தமது வெற்றி குறித்து மைதிலி தாகூர் கூறியதாவது; இந்த வெற்றி எனக்கு கனவு போல இருக்கிறது. மக்கள் என்னிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார் என்று தெரிகிறது. முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளேன். என்னை தேர்ந்தெடுக்க மக்களுக்கு நான் மகள் போல் சேவை செய்வேன். மக்களுக்காக எப்படி சேவை செய்ய வேண்டும் என்பது என் ஒரே எண்ணமாக உள்ளது என்றார்.
யார் இவர்?
பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டி என்ற ஊரில் 2020ம் ஆண்டு பிறந்தவர் மைதிலி தாகூர். இசைத்துறையில் தமக்கு என தனியிடம் பிடித்தவர். இவரின் குடும்பம் பாரம்பரியமான கலைக்குடும்பம். நாட்டுப்புற இசையை தந்தை மற்றும் தாத்தாவிடம் இருந்து பயின்றவர்.
பள்ளிப்படிப்பை டில்லியில் முடித்தவர். தமது 5ம் வகுப்பிலேயே திறமையின் மூலம் பள்ளியில் அனைவரையும் கவர்ந்தவர். டில்லி பல்கலை.க்கு உட்பட்ட ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்.
முகநூல், யூடியூப் மூலம் தமது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். சமூக வலை தளங்களில் இவருக்கான ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் ஏராளம்.
100க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றி, அதன் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர்.

