டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
UPDATED : நவ 12, 2025 10:56 PM
ADDED : நவ 12, 2025 06:10 PM

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அது பயங்கரவாத தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம்(நவ.,10) டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை பூடான் சென்றுவிட்டு இன்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான சதிகாரர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டில்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கி நடந்தது. பிரதமர் இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான கோழைத்தனமான தாக்குதலுக்கு மத்திய அமைச்சரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வன்முறை செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை மத்திய அரசு சகித்துக் கொள்ளாது. டில்லி தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து வந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும். இந்த சம்பவம் குறித்த விசாரணையை மிகவும் அவசரமாகவும், தொழில் ரீதியாகவும் தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலைமையை அரசு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தேச பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும், இந்தியர்களின் நல்வாழ்வை பாதுாப்பதற்கும் அரசின் உறுதியை மத்திய அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

