மகன் மீது பலாத்கார பழி சுமத்தி மோசடி: பெற்றோரை குறிவைக்கும் 'சைபர்' குற்றவாளிகள்
மகன் மீது பலாத்கார பழி சுமத்தி மோசடி: பெற்றோரை குறிவைக்கும் 'சைபர்' குற்றவாளிகள்
ADDED : நவ 13, 2025 12:26 AM

சென்னை: சி.பி.ஐ., அதிகாரிகள் போல தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகள், அப்பாவி பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவதாக, போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக பணம் மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் போல, 'நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் உள்ளது.
'உங்களை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளோம். சிறையில் அடைக்காமல் இருக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும்' என, மோசடி செய்து வருகின்றனர்.
இந்த யுக்தியை பயன்படுத்தி, நடப்பு ஆண்டில் தமிழக மக்களிடம் இருந்து, 1,100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இதற்கு, மக்களின் அறியாமை, பதற்றம், செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் போன்றவையே காரணம்.
தற்போது, பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று இருக்கும் மகன்கள் வீடு திரும்புவதற்குள், அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்கின்றனர். பதற்றத்தில் பேசும் அவர்களிடமே, மகன் களின் பெயரையும் தெரிந்து கொள்கின்றனர்.
'உங்கள் மகன் தன்னுடன் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். அவனை கைது செய்துள்ளோம்' என, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி பெற்றோரை குறி வைத்து, இத்தகைய மோசடி நடக்கிறது.
இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டாம். போலீஸ் உதவி எண் 100க்கும், சைபர் குற்றங்கள் தொடர்பாக, 1930 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையளத்திலும் புகார் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

