'சென்டர் மீடியனில்' கொடிக்கம்பங்கள்: தமிழக அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
'சென்டர் மீடியனில்' கொடிக்கம்பங்கள்: தமிழக அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
ADDED : நவ 12, 2025 10:13 PM

சென்னை : 'சாலைகளின் 'சென்டர் மீடியன்'களில், கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில், அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.
அவற்றை, கடந்த ஏப்., 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்வதற்காக, இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், இன்று(நவ.,12)விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக, தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''அரசின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது தான். ஆனால், சாலைகளின் 'சென்டர் மீடியன்'களில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது என, உத்தரவு பிறப்பித்தும், சென்டர் மீடியன்களில், அனைத்து கட்சிகளும் கொடிகம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகின்றன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, சென்னை அண்ணா மேம்பாலத்தில், ஆளுங்கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அது குறித்த வீடியோ காட்சிகள் என்னிடம் உள்ளன,'' என்றார்.
அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படும்' என, நீதிபதி எச்சரித்தார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கோரப்பட்டு உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

