அடிக்கடி மின் தடை: தடுக்க மின் வாரியம் புதிய திட்டம்
அடிக்கடி மின் தடை: தடுக்க மின் வாரியம் புதிய திட்டம்
ADDED : ஜூலை 09, 2026 12:13 AM

சென்னை: அடிக்கடி மின் தடை ஏற்படும் இடங்களில், அந்த பிரச்னையை நிரந்தரமாக தடுக்க, ஆர்.டி.இ.பி., எனப்படும் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புகளை ஒழிக்கும் முன்னெடுப்பை மின் வாரியம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்களில் அடிக்கடி நிகழும் சாதன பழுதால், மின் தடை ஏற்படுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண, ஆர்.டி.இ.பி., அதாவது மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புகளை தடுக்கும் முன்னெடுப்பை தொடங்க, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
கடந்த ஆறு மாதங்களில், மீண்டும் மீண்டும் மின் துண்டிப்பு ஏற்பட்ட துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை பொறியாளர்கள் அடையாளம் காண வேண்டும்.
மின் துண்டிப்பு எத்தனை முறை ஏற்பட்டது; மின் தடை நீடித்த காலம்; பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை; மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் எத்தனை பாதிக்கப்பட்டன; பருவநிலை அல்லது வானிலை காரணமாக நிகழ்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
இதற்கென தனி பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மின் துண்டிப்பு ஏற்பட்ட இடங்களில், புதிய துணை மின் நிலையம், கூடுதல் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களை நிறுவுவது, பழயை மின் சாதனங்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
