சீன செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
சீன செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
ADDED : ஜூலை 03, 2026 07:37 PM

புதுடில்லி: 'இ - ரிக்ஷா' எனப்படும், மின்சார ரிக்ஷாக்களை தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் மூன்று சீன செயலிகளை, 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவற்றில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காற்று மாசு காரணமாக பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில், 'லித்தியம் பேட்டரி'யில் இயங்கும் இ - ரிக்ஷாக்கள், சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களே அதிகம் உள்ளன.
இந்நிலையில், இ - ரிக்ஷாக்களை சிலர், 'மொபைல் போன்' செயலி ஒன்றை வைத்து தொலைவில் இருந்தே செயலிழக்கச் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.இ - ரிக்ஷா பூட்டப்பட்டதாக கூறி ஓட்டுநர் ஒருவர் கதறி அழுத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டில்லி அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், போக்குவரத்து துறை மற்றும் டில்லி போலீசாரிடம் உண்மை நிலையை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
விசாரணையில், 'பேட் பி.எம்.எஸ்., இ - போச்அயான், லாஸிகி' ஆகிய மூன்று சீன செயலிகள் லித்தியம் பேட்டரியில் இயங்கும் இ - ரிக்ஷாக்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பு உடன், 'புளூடூத்' தொழில்நுட்பம் வாயிலாக இணைந்து செயல்பட்டு முடக்க உதவுவது தெரிந்தது.
டில்லி மட்டுமின்றி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்திலும் இந்த செயலியை மர்ம நபர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. எனவே மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க உத்தரவிட்டது.
