ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்பும் 'திராவிடர் தளம்': புத்தக கண்காட்சியில் புகுந்து விஷமத்தனம்
ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்பும் 'திராவிடர் தளம்': புத்தக கண்காட்சியில் புகுந்து விஷமத்தனம்
ADDED : டிச 09, 2025 10:08 AM

பல்லடம்: பல்லடம் புத்தகக் கண்காட்சியில், ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்பும் வகையில் நோட்டீஸ் வினியோகித்த 'திராவிடர் தளம்' அமைப்பின் தகிடுதத்த வேலைகள் தெரிய வந்துள்ளன. இளைஞர்கள், மாணவர்களிடம் தவறான கருத்துகளை விதைக்கும் இந்த அமைப்பு, ஹிந்து மதத்துக்கு எதிராக 'முகமூடி' போட்டு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் மீது நடவடிக்கை பாய வேண்டும் என்று ஹிந்து அமைப்புகளிடம் எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள மணிவேல் மஹாலில், கடந்த 5ம் தேதி துவங்கி இன்று வரை புத்தகக் கண்காட்சி நடக்கிறது.
இமைகள் ரோட்டரி சங்கம், பல்லடம் நகராட்சி, தமிழ்ச்சங்கம் உள்ளிட்டவை சார்பில் நடத்தப்படும். புத்தகக் கண்காட்சியில், 'கருஞ்சட்டை பதிப்பகத்தினர் அரங்கு அமைத்திருந்தனர்.
இந்த அரங்கில், ஒருவர். 'திராவிடர் தளம்' என்ற பெயரில் பக்தியுள்ள மாணவர்களுக்கு சில கேள்விகள் என்ற நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டன. இதில், ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கருத்துகள் இடம் பெற்றிருந்தன, கண்காட்சிக்கு வந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பல்வேறு ஹிந்து அமைப்புகள், புத்தகக் கண்காட்சியை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஹிந்து அமைப்பினரிடம் புகார் மனு பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
'திராவிடர் தளம்' என்பது, திராவிட மாணவர் கழகம்' என்ற அமைப்பையும் கொண்டுள்ளது. கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னிறுத்தும் இந்த அமைப்பு, நிர்வாகிகள் யாரும் இன்றி, செயல்படும் ஒரு அமைப்பாகும். இவர்கள் நடத்தும் கூட்டங்களில் தி.மு.க.வினர் பங்கேற்று பேசுவதும் தெரிய வந்துள்ளது. ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துவது அமைப்பின் குறிக்கோளில் முக்கியமானதாக இருக்கிறது.
ஹிந்து மதம் இழிவுபடுத்துதலே திராவிடர்தளத்தின் நோக்கம். பல்லடத்தின் வினியோகிக்கப்பட்ட நோட்டீசில், முழுமையாக ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் இழிவுபடுத்தும் விதமான கருத்துகளே இடம் பெற்றிருந்தன. ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மூடநம்பிக்கைகளை ஒழிப்பதாக கூறி, இவர்களது மோசமான எண்ணங்கள், கருத்துகளை மக்களிடம், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களிடம் விதைக்க, இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகளை பயன்படுத்துகின்றனர்.
'அமைப்பின் பெயர் கூட நிரந்தரமானது இல்லை: பெயரைக்கூட தேவைப்பட்டால் மாற்றுவோம்' என்று, தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அமைப்பினர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்புவதற்கான முகமூடியாகவே இந்த அமைப்பு செயல்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. ஆனால் திராவிடர் தளம் போன்ற விஷம அமைப்புகள், கண்காட்சிக்குள் எப்படியோ புகுந்து, மத நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயலில் ஈடுபடுகின்றன.
ஹிந்து பரிவார் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சாய் குமரன் கூறியதாவது:
முறைப்படி புகார் கொடுத்தபின்னும், நோட்டீஸ் வினியோகத்திற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை.
'எங்களுக்கே தெரியாது'
புத்தகக் கண்காட்சியை நடத்திவரும் இமைகள் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், 'மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டே அனைத்து மதத்தினருக்கும் கண்காட்சியில் கடைகள் வழங்கி இருந்தோம்.
கண்காட்சி துவங்கும் முன்பு, சமுதாயத்தை சீர் கெடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என, கடை உரிமைளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், எங்களுக்கே தெரியாமல், மறைத்து வைத்து நோட்டீஸ் வினியோகித்துள்ளனர். எங்களுக்கு தெரிந்திருந்தால், நாங்களே உரிய நடவடிக்கை எடுத்திருப்போம். இனி, இதுபோன்ற செயல்கள் நடக்காது என்றார்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
ஹிந்து பரிவார் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சாய் குமரன் கூறியதாவது;
புத்தகக் கண்காட்சியில், ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட புத்த கங்களை விற்பனை செய்ய யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், பொதுமக்கள் பலரும் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சியில், குறிப்பிட்டு, ஹிந்து மதத்தையும், மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக நோட்டீஸ்களை அச்சடித்து வினியோகித்ததை ஏற்க இயலாது. இது, ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் செயலாகும். உரிய, ஆதாரங்களுடன் தான் இதற்கான புகாரை அளித்துள்ளோம். எனவே, மதக்கலவரத்தை தூண்டும் வகையில், சட்ட விரோதமாக நோட்டீஸ் வினியோகித்தவர்கள் மீது, புகார் அடிப்படையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், விரைவில், ஹிந்து அமைப்புகளை திரட்டி, இது தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு சாய் குமரன் கூறினார்.
ஹிந்து முன்னணி கண்டனம்
ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:
புத்தக கண்காட்சி என்பது அறிவை வளர்க்கும் விதமாக நடக்க வேண்டும். அதற்குப் பதிலாக கலகத்தை விளைவிக்கும் வகையில் இது போன்ற செயல்கள் நடக்கிறது.
திராவிட கொள்கை என்ற பெயரில் மாணவர்கள் மத்தியில் நாத்திகப் பிரசாரம் செய்கின்றனர். அதனடிப்படையில் தான் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அதில் பங்கேற்க செய்து, மூளைச்சலவை செய்கின்றனர். நாத்திக நுால் வழங்குவது அவர்கள் சுதந்திரமாக இருந்தாலும் புத்தகக் கண்காட்சியில் இதை எப்படி அனுமதிக்கலாம்? இது கடும் கண்டனத்துக்குரியது. கடந்தாண்டு திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியிலும் இதுபோல் நடந்த நாத்திக பிரசாரம் காரணமாக பெரும் பிரச்னை ஏற்பட்டது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புத்தக கண்காட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் உரிய கண்காணிப்பும் அறிவுறுத்தலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கிஷோர் குமார் கூறினார்.

