எஸ்ஐஆர், ஓட்டு திருட்டே தோல்விக்கு காரணம்: பீஹார் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் சப்பைக்கட்டு
எஸ்ஐஆர், ஓட்டு திருட்டே தோல்விக்கு காரணம்: பீஹார் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் சப்பைக்கட்டு
ADDED : நவ 14, 2025 09:52 PM

புதுடில்லி; எஸ்ஐஆர், ஓட்டு திருட்டு போன்றவையே பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி இருக்கின்றன.
பீ'ஹார் சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன. வெற்றிக்கான காரணங்களை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அடுக்கி, ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.
இப்படியான சூழலில் தோல்விக்கு எஸ்ஐஆரும், ஓட்டுத் திருட்டுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி இருக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியதாவது;
கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீஹார் வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது.
தொடக்கம் முதலே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது ஆகும்.
காங்கிரசும், இண்டி கூட்டணியும் தேர்தல் முடிவை ஆழமாக பகுப்பாய்வு செய்து ஜனநாயகத்தை காக்க எங்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் திறம்பட செயல்படுவோம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
காங்கிரசின் பீஹார் பார்வையாரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறியதாவது;
பீஹார் தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 தரப்பட்டது. தேர்தல் கமிஷன் இதை பார்த்துக் கொண்டு வாய் மூடி மவுனியாக இருந்தது.
ஏன் இதுபோன்ற செயல்களை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை? இதை தான் ராகுல் ஓட்டுத் திருட்டு என்றார். ஆளும்கட்சியுடன் தேர்தல் கமிஷன் இணைந்து செயல்படுகிறது என்றார்.
பவன்கெரா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ், கூறுகையில், இந்த தேர்தலானது தலைமை தேர்தல் கமிஷனுக்கும், பீஹார் மக்களுக்குமான நேரடி போட்டி. தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், பீஹார் மக்களை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றார்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாடி கட்சி கூறுகையில், பீஹாரில் எதிர்க்கட்சிகள் மோசமாக தோற்க எஸ்ஐஆர் காரணம். இது ஒரு தேர்தல் சதி. பீஹாருக்கு பின்னர், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் அல்லது வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியமில்லை. தேர்தல் சதி அம்பலாகிவிட்டது என்றார்.

