திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான்; அரசு பதிவேடுகளில் நிலஅளவைக்கல் குறித்த தகவல் இல்லை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான்; அரசு பதிவேடுகளில் நிலஅளவைக்கல் குறித்த தகவல் இல்லை
ADDED : டிச 10, 2025 12:58 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அது நிலஅளவைக்கல் என்று சிலர் ஆதாரமற்ற பொய்களை கூறிவரும் நிலையில், மதுரை வழக்கறிஞர் தங்கப்பாண்டியன், ஆங்கிலேயர் காலத்து நில அளவைக்கல், தீபத்துாண் போல் இருக்காது' என ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாக உள்ள துாணில் அல்லாமல், மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத்துாணில் இந்தாண்டு தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் அரசு நிறைவேற்ற மறுக்கிறது.
உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசே மதிக்காமல் இருப்பதை இங்கு தான் பார்க்க முடிகிறது.சாமானியர்களின் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை எதிர்காலத்தில் எந்த அளவுக்கு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த விவகாரம் ஒரு தவறான முன்னுதாரணம்.
உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுப்பதற்கு கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, அது தீபத்துாண் இல்லை; நில அளவை கல் தான் என்பதாகும். நில அளவைக் கல் என்று பேசுவோர் சொல்லும் அந்த அளவையானது மகா முக்கோணவியல் அளவீடு (GREAT TRIGONOMETRICAL SURVEY-GTS) முறை ஆகும்.
சென்னையில் அளவீடு கல் 'அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவைக் கல்லின் எச்சம் தான் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல். அது தீபத்துாண் இல்லை' என்பது கோயில் நிர்வாகத்தின் வாதம்.
எங்கோ, எவரோ, எழுதியதை, பேசியதை வைத்து அது அளவைக் கல் தான் என்று பேசுவோர் எவருமே GTS அளவைக் கல்லின் எச்சமாக மிச்சமிருக்கும் கல்துாணை இதுவரை பார்த்திராதவர் என்றே அர்த்தம்.
முக்கோணவியல் அளவீட்டு முறையில் அளவீடு செய்யப்பட்ட அளவைக் கற்களின் எச்சம் தமிழகத்தில் சென்னையை தவிர வேறு எங்குமே இல்லை என்பது அளவியல் துறையின் தகவல். திருப்பரங்குன்றம் மலையானது முக்கோணவியல் அறிவியலில் அளவீடு செய்யப்பட்ட ஒரு புள்ளி என்ற போதிலும், அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவைக்கல் தான் மலை உச்சியில் இருக்கும் கல் என்பது சுத்த திராவிடத்தனமான பேச்சு.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் போல, மதுரை கீழக்குயில்குடியில் உள்ள சமணர் மலை உச்சியிலும் இதே வடிவில் தீபத்துாண் உள்ளது.
உண்மையில் சென்னையில் இருந்து தான் மேற்படி அளவீட்டு முறையில் இந்தியாவின் நிலப்பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பரங்கி மலையிலும் மற்றும் மங்களூரு பகுதியை சுற்றி சில இடங்களிலும் மட்டுமே GTS அளவையில் பயன்படுத்தப்பட்ட கற்களின் எச்சங்கள் இன்னும் சில உள்ளன.
GTS அளவைக் கல்லில் ஒரே மாதிரி எழுத்துகளுடன் GTS என்ற குறியீடும், அந்த கல்லைப் பற்றிய விபரக் குறிப்பும் காணப்படுகிறது. ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் அப்படி ஏதும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலை, திருமங்கலம் வருவாய் ஆர்.டி.ஓ.,வின்கீழ் வருகிறது. அந்த அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை நான் ஆய்வு செய்தபோது நிலஅளவைக்கல் குறித்த எந்த விபரமும் அதில் இல்லை. அப்படி இருந்தால் தமிழக அரசு இந்நேரம் அதை ஆதாரமாக காட்டியிருக்குமே. இவ்வாறு கூறினார்.

