திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : டிச 07, 2025 11:14 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை செயல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் சென்று கார்த்திகை தீபம் ஏற்றவும், அதற்கு மத்தியப்படை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், திருப்பரங்குன்றத்திலும், மலை உச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.
மலை உச்சியில் இருக்கும் தர்காவுக்கு செல்வதற்கும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மலை ஏற வேண்டும் என்று சென்ற அனைவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மலையில் இருக்கும் தீபத்தூண் மற்றும் தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

