செர்னோபில் அணு உலை பாதுகாப்பு கவசத்துக்கு சேதம்; சர்வதேச முகமை அபாய அறிவிப்பு
செர்னோபில் அணு உலை பாதுகாப்பு கவசத்துக்கு சேதம்; சர்வதேச முகமை அபாய அறிவிப்பு
ADDED : டிச 07, 2025 12:11 PM

கீவ்: சேதமுற்ற செர்னோபில் அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பாதுகாப்பு கவசம், ரஷ்யா- உக்ரைன் போரில் சேதம் அடைந்துள்ளது.
உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. கதிர் வீச்சு வெளியாகி ஏராளமானோர் உயிரிழந்தனர். அந்த பகுதியே மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது.
இரும்புத்திரை நாடாக இருந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால், அணு உலை வெடி விபத்து பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. சோவியத் யூனியன் பிரிந்து, ரஷ்யாவும், உக்ரைனும் தனித்தனி நாடுகள் ஆன நிலையில் தான் முழுமையான பாதிப்புகள் தெரியவந்தன.
இதையடுத்து, சர்வதேச நாடுகளின் முயற்சியில், சேதமுற்ற அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கின. சர்வதேச நாடுகள், தன்னார்வ அமைப்புகள் என 45 நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், அணு உலையை சுற்றிலும் கவச அமைப்பு நிறுவப்பட்டது.
வேறு ஒரு இடத்தில் கவச அமைப்பை நிறுவி, அதை நகர்த்திச்சென்று அணு உலையை மூடி, கதிர் வீச்சு வெளியில் வராமல் செய்தனர். இது, உலகின் மிகப்பெரிய நகரும் கட்டுமானம் என்று வர்ணிக்கப்பட்ட கவச அமைப்பாகும்.
100 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப கவச அமைப்பு நிறுவப்பட்டது. இதற்கான பணிகள், 2010 முதல் 2019ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், வெடித்துச் சிதறிய அணு உலையில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்று வட்டார பகுதிகளில் யாரும் வசிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இதில், ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில், அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகமை வல்லுநர் குழுவினர் நடத்திய ஆய்வில், பாதுகாப்பு கவசத்தின் கதிர் வீச்சு தடுக்கும் திறனுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக, கண்டறிந்துள்ளனர்.
கவச அமைப்பின் கூரையின் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, முழுமையான மறு சீரமைப்பு பணி அவசியம் என்று சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.
அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளதற்கு ரஷ்யா நடத்திய தாக்குதலே காரணம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

