ADDED : ஜூன் 09, 2026 09:05 AM

- நமது நிருபர் -
'வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்புவது போல' ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி, தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு, அதனால் ஏற்படும் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு தவிப்பதை தான் குறிக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு இது நடந்தது. தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு மனித உரிமை காரணங்களை முன்வைத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். அதாவது, அப்போதைய அரசின் உத்தரவுப்படி அதிகாரி அந்த தடையை விதித்தார். இந்த உத்தரவு தி.மு.க., அரசுக்கு எதிராக, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திராவிடர் கழகம் மற்றும் சில அமைப்புகள், 'மனிதனை மனிதன் பல்லக்கில் துாக்கி சுமப்பது மனித உரிமை மீறல்' என்று எதிர்ப்பு தெரிவித்ததால், தடை விதிக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.
தி.க., என்ற இயக்கத்தால், மாநிலம் முழுதும் மொத்தத்தில் 1,000 பேரைக்கூட கூட்ட முடியாது. அப்படிப்பட்ட, 'பலமான' அமைப்புக்கு பயந்து, பட்டினப்பிரவேசத்தை தடுத்தது தி.மு.க., அரசு. கடும் எதிர்ப்பு எழுந்ததும் தடையை விலக்கி, பட்டினப்பிரவேசம் நடத்த அனுமதித்தது தி.மு.க., அரசு.
இதற்கிடையே சர்ச்சை ஏற்பட்டதும், உயர் நீதிமன்றத்திற்கு இப்பிரச்னை சென்றது. அதன் மீது அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் அடங்கிய பெஞ்ச், 'பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
'சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை விதிக்கப்பட்டது' என்று காரணம் கூறும் அரசு, ஆதரவு இருப்பதால் அனுமதி தரப்பட்டது என்று கூறவில்லை. தி.மு.க.,வுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு முக்கியமா, மக்கள் ஆதரவே இல்லாத தி.க.,-வின் ஆதரவு முக்கியமா என்று தெரியாமல், தி.க., என்ன சொன்னாலும் அதற்கு ஏற்ப ஆடியது.
ஆனால், இந்த ஆண்டு என்ன நடந்தது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் இரண்டு நாட்களுக்கு முன், வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த பகுதி மக்களை தவிர, வேறு யாருக்கும் நடந்ததும் தெரியவில்லை; மு டிந்ததும் தெரியவில்லை.
செய்யப்பட வேண்டிய அனைத்து சடங்குகளும் சரியாக செய்யப்பட்டுள்ளன. அப்பகுதி பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கோவிலிலும் இதுபோல் ஏதாவது விழாக்கள் ஆண்டு முழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றால், அதில் உடனே மூக்கை நுழைப்பது தி.மு.க.,வின் ஜாதகம்.
அதில் மட்டும், தி.மு.க.,வுக்கு அப்படி ஒரு ஆனந்தம். இதனால், தி.மு.க., என்றாலே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பெயர் வலுப்பட்டுவிட்டது. மக்களும் வேறு வேலை வெட்டி இல்லாமல், இப்பிரச்னை பற்றியே பேசத் துவங்கி விடுகின்றனர். தி.மு.க.,வின் இந்த செயல்பாட்டால் இறுதியில் என்ன ஆனது. தேர்தலில் தோற்று, ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறது அக்கட்சி.
பட்டினப்பிரவேசம் மட்டுமல்ல; அனைத்து ஹிந்து விழாக்கள், மதச்சடங்குகள், பழக்க வழக்கங்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருந்தாலே போதும். அந்தந்த விழாக்கள் அமைதியாகவும், மக்கள் ஆதரவுடனும் நடந்து முடிந்து விடும்.
மக்களும் பிரச்னை, பிரச்னை என்று அதை பற்றியே சில நாட்கள் பேசாமல், அடுத்த வேலையை பார்க்க போய் விடுவர். இந்த ஆண்டு அமைதியாக நடந்து முடிந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் இருந்தாவது தி.மு.க., பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசின் வேலை அரசாள்வது மட்டுமே. இதுவே மக்கள் எதிர்பார்ப்பு.
