ஷபாலி, தீப்தி அரைசதம்; இந்திய அணி 298 ரன் குவிப்பு
ஷபாலி, தீப்தி அரைசதம்; இந்திய அணி 298 ரன் குவிப்பு
UPDATED : நவ 02, 2025 08:57 PM
ADDED : நவ 02, 2025 04:51 PM

நவிமும்பை: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்னை குவித்துள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. நவி மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.
இதில், டாஸை வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இறங்கினர். ஆரம்பத்தில் மந்தனா கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். மறுமுனையில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடினார்.
அணியின் ஸ்கோர் 104 ரன்னை எட்டிய போது, ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), ஹர்மன்ப்ரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.
மற்றொருபுறம் கடைசி வரை விளையாடிய தீப்தி சர்மா 58 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது.
தென்னாப்ரிக்கா தரப்பில் காகா 3 விக்கெட்டுகளும், மலபா, டி கிளெர்க், டிரையன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

