UPDATED : ஜன 18, 2026 07:39 AM
ADDED : ஜன 18, 2026 04:17 AM

நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்தார், முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 'மும்பை, மஹாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல... இது ஒரு சர்வதேச நகரம்' என பேசினார்.
உடனே, 'மராட்டியர்களை குறித்து தரக்குறைவாக பேசிவிட்டார் அண்ணாமலை' என, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கண்டனம் தெரிவித்தது. உத்தவ் தாக்கரேவின் உறவினரும், நவ நிர்மாண் சேனா கட்சி தலைவருமான ராஜ் தாக்கரே, அண்ணாமலையை, 'ரசமலாய்' என கிண்டலாக பேசியதுடன், தென்னிந்தியர்களையும் கேவலமாக பேசினார்.
இப்படியெல்லாம் பேசினால், மராட்டியர்களின் ஓட்டுகள் தங்களுக்கே கிடைக்கும் என நினைத்தனர் எதிர்க்கட்சியினர். ஆனால், தேர்தலில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது உறவினர் ராஜ் தாக்கரேவின் கூட்டணி பரிதாபமாக தோற்றது.
ஆண்டுக்கு, 75,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தயாரிக்கும் மும்பை மாநகராட்சி, 1985ல் இருந்து சிவசேனா வசம் இருந்தது. இப்போது பா.ஜ., பக்கம் கை மாறிவிட்டது.
முடிவுகளுக்கு பின், எங்கும் அண்ணாமலை புகழ் தான். அண்ணாமலையின் பிரசாரத்தால், மும்பை தமிழர்கள் மட்டுமன்றி, மராட்டியர்களும், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனராம். ராஜ் தாக்கரேவிற்கு, கிலோ கணக்கில் ரசமலாய் அனுப்பியுள்ளார் பெங்களூரு பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன். 'அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்' என கொக்கரித்த உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி., சஞ்சய் ராவத், வாய் மூடி மவுனமாகி விட்டார்.
இன்னொரு பக்கம் மும்பையில் வசிக்கும் பீஹாரைச் சேர்ந்தவர்களும், அண்ணாமலைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் களம் இறங்கி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவிற்கு எதிராக கிண்டலும், கேலியுமாக ஏகப்பட்ட, 'மீம்ஸ்'களை பரப்பி வருகின்றனர்.
உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் எப்போதும் மும்பையில் வசிக்கும் பீஹாரிகளை கிண்டலாக பேசுவதுடன், அவர்களை பீகாருக்கே அனுப்ப வேண்டும் என, பேசி வருபவர்கள்.

