பழனிசாமிக்கு வேலுமணி அணியினர் பகிரங்க கடிதம்; தவறான முடிவுகளால் ஆல விருட்சம் கரைவதாக வேதனை
பழனிசாமிக்கு வேலுமணி அணியினர் பகிரங்க கடிதம்; தவறான முடிவுகளால் ஆல விருட்சம் கரைவதாக வேதனை
ADDED : ஜூலை 02, 2026 06:13 AM

சென்னை: 'அ.தி.மு.க., எனும் ஆல விருட்சம், உங்கள் முடிவுகளால் கரைந்து வருகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவை ஒட்ட வைக்கும் முயற்சியாக வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்புகளை பழனிசாமி வழங்கி இருந்தார்.
இந்நிலையில், விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, சுகுமார் என, ஒன்பது பேர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் விபரம்:
அ.தி.மு.க., பொதுச்செயலராகிய நீங்கள், தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததால் தான், 25 எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., எதிர்ப்பில் வளர்ந்த த.வெ.க.,வை ஆதரித்தோம். ஆனால், நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து விடுவித்தீர்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், உங்களை முதல்வராகவும், பொதுச்செயலராகவும் அமர வைக்க, கட்சி மீதான வழக்குகளையும் எதிர்கொண்ட சி.வி.சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்காமல் ஒதுக்கி வைத்ததை ஏற்க முடியாது.
தேர்தலுக்கு முன்பும், பின்பும் உங்களின் செயல்பாடுகளால் விலகிச் சென்ற எம்.எல்.ஏ.,க்களை, மீண்டும் கட்சி பணியாற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன் வாயிலாக கேட்டுக் கொண்டீர்கள்.
அதன்படி, சபாநாயகரிடம் கொடுத்த தகுதி நீக்க கடிதத்தை திரும்ப பெற்றோம். நீங்களும் கடிதத்தை திரும்ப பெற்றீர்கள்.
அந்த உடன்படிக்கையின்படி, அவரவர் வகித்த பதவிகளை, ஜூன் 4ம் தேதிக்குள் திருப்பி தருவதாக உறுதியளித்தீர்கள்; கடந்த 22ம் தேதி அது குறித்து நினைவூட்டினோம். ஆனால், தற்போது நீங்கள் அறிவித்துள்ள பொறுப்புகளை பார்க்கும்போது, கட்சி வளர்ச்சியை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
முன்பு, 'ஜா, ஜெ' அணி என அ.தி.மு.க., பிளவுபட்டு, மீண்டும் இணைந்தபோது, விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை ஜெயலலிதா வழங்கினார். அதேபோல், பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்களுக்கும், மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போது, நீங்கள் ஒப்புக் கொண்டதை செய்யவில்லை. இதனால் தான், அ.தி.மு.க.,வில் இருந்து சாரைசாரையாக விலகி, த.வெ.க.,வில் இணைகின்றனர். அ.தி.மு.க., எனும் ஆல விருட்சம், நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால் கரைந்து வருகிறது.
தற்போது நீங்கள் அறிவித்த பொறுப்புகளை தவறான முடிவாகவே கருதுகிறோம். எனவே, நாங்கள் யாரும் நீங்கள் வழங்கிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்; கட்சி உறுப்பினர்களாகவே இருந்து செயல்படுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 'தலைமையின் சுயநலப் போக்கு, கட்சியை விஷமாக்கி வருகிறது' என பழனிசாமி மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.
