கடலுார் சாலையில் இரு புறமும் பள்ளம் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி
கடலுார் சாலையில் இரு புறமும் பள்ளம் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 06, 2026 03:06 AM
அரியாங்குப்பம்: புதுச்சேரி - கடலுார் சாலையில், குறுகலான பகுதியில் தற்காலிக சென்டர் மீடியன் அமைத்துள்ளனர். இப்பகுதியில் சாலையின் இரு புறத்திலும் பள்ளமாக இருப்பதால், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் இருந்து தவளக்குப்பம் வரை குறுகலான சாலையில், தற்காலிகமாக இரும்பு பாரல்கள் வைத்து மீடியன் அமைத்துள்ளனர். இங்கு, சாலையின் இரு புறமும் பள்ளமாக உள்ளது.
இந்த சூழலில், இப்பகுதியை கடக்கும் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஒதுங்கிச் செல்ல முற்படும் போது, தார் சாலையை விட்டு மண் தரையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சாலையின் இருபுறத்திலும் பக்க வாட்டில் பள்ளமாக உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன், சாலையோரம் மண்கொட்டி பள்ளங்களை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
