/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது
/
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது
ADDED : டிச 09, 2025 11:23 PM

கோல்கட்டா: இந்தியா வரவுள்ள மெஸ்ஸி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் 'நட்பு' போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் இப்போட்டி ரத்தானது.
இருப்பினும், 'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக, டிசம்பர் 13, அதிகாலை 1:30 மணிக்கு இந்தியா வருகிறார். இவரது நீண்ட கால கிளப் அணி நண்பர், உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் என மூன்று பேர் வருகின்றனர்.
கோல்கட்டா, இ.எம் பைபாஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஸ்பான்சர் சந்திப்பு நடக்கிறது. பின் இந்தியா-அர்ஜென்டினா உணவுத்திருவிழா நடக்கிறது. அடுத்து தனது ஆளுயர சிலையை திறந்து வைக்கிறார். த
பின் சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸிக்கு ஓவியம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் 70,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள உள்ளனர்.
மதியம் 2:00 மணிக்கு மெஸ்ஸி, ஐதராபாத் செல்கிறார். இரவு 7:00 மணிக்கு ஐதராபாத் மைதானத்தில் நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்கிறார்.
மும்பையில்...
இரண்டாவது நாள் மும்பை செல்கிறார். மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இரவில் 45 நிமிடம் நடக்கும் 'பேஷன்' நிகழ்வில் பங்கேற்கிறார்.
பிரதமருடன் சந்திப்பு
மூன்றாவது நாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
இரண்டாவது முறை
கடந்த 2011, ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் இந்தியா வந்தார் மெஸ்ஸி. அப்போது கோல்கட்டா, சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நட்பு போட்டியில் (ஆக. 15), அர்ஜென்டினா, வெனிசுலா அணிகள் மோதின. தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வருகிறார் மெஸ்ஸி.

