/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக நலக்கூடம் கட்ட சிறுதாவூரில் பூமி பூஜை
/
சமூக நலக்கூடம் கட்ட சிறுதாவூரில் பூமி பூஜை
ADDED : டிச 09, 2025 06:50 AM
திருப்போரூர்: சிறுதாவூர் ஊராட்சியில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக சமூக நலக்கூடம் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.
திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் ஊராட்சியில் அடங்கிய சிறுதாவூர், வேலங்காடு உள்ளிட்ட ஐந்து கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இது, விவசாயம் மற்றும் கட்டட கூலி தொழில் செய்யும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் சமூக நலக்கூடம் இல்லை. இதனால் மக்கள், தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை திருப்போரூர், மானாமதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
இதனால் வீண் அலைச்சல், கால விரயம், பண விரயம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., வான பாலாஜியிடம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இப்பகுதியில் புதிய சமூக நலக்கூட கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுத்தது.
தரைதளம் 2,228 சதுர அடியிலும், முதல் தளம் 1,874 சதுர அடியிலும் கட்ட 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை விழா, நேற்று நடந்தது.
இதில், ஊராட்சி தலைவர் அருள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி பங்கேற்று, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

