/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 31, 2025 12:52 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதியில் வெள்ளரி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரசங்கால், வெளியம்பாக்கம், நெடுங்கல், ராமாபுரம், தொழுப்பேடு, ஓட்டக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கொடி வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சத்யராஜ், 35, கூறியதாவது:
தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, குறைந்த நாளில் மகசூல் பெறும் வகையில், தோட்டக்கலை பயிரான கொடி வெள்ளரி பயிரிடப்படுகிறது. 1 ஏக்கர் கொடி வெள்ளரி பயிர் செய்ய அரை கிலோ விதை தேவைப்படுகிறது. அரை கிலோ விதை வாங்க 900 ரூபாய் செலவாகிறது.
விதை நடவு செய்யப்பட்ட நாளிலிருந்து, 45 வது நாளில், அறுவடைக்கு தயாராகி விடும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் கொடி வெள்ளரி சாகுபடி நடக்கும். வியாபாரிகள், அறுவடை செய்யப்படும் இடங்களுக்கு சென்று வாங்கி செல்கின்றனர்.
அதனால், விவசாயிகளுக்கு அலைச்சல் குறைவு. ஒரு கிலோ கொடி வெள்ளரி தரத்திற்கு ஏற்றவாறு, 20 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.
நாள்தோறும் 10 கிலோ வரை சாகுபடி செய்யப்படுகிறது.
காட்டுப் பன்றிகள் தொல்லை இருப்பதால், வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கப்படுகிறது. கூடுதல் விலை கிடைத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

