தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் விபத்து: அச்சத்தில் மக்கள்
தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் விபத்து: அச்சத்தில் மக்கள்
UPDATED : ஜூலை 05, 2026 03:34 PM
ADDED : ஜூலை 05, 2026 03:10 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இதில், 2வது வார்டுக்கு உட்பட்ட, யமுனா நகர், அருள் நகரில் உள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வான உயரத்தில் செல்கின்றன.
கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் மின் கம்பிகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மின் கம்பங்கள், உயரம் குறைவாக இருப்பதால், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
மேலும், சாலை திருப்பத்தில், இந்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், கனரக வாகனங்கள் பயணிக்கும்போது, மின் கம்பிகள் மீது உராய்ந்து, பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் உயிர்பலியும் நிகழலாம்.
தவிர, காற்று பலமாக வீசும் போது, மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் தீப்பொறி பறந்து, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
அருள்நகரில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளி வாகனங்கள் இவ்வழியாக செல்லும்போது, மின் கம்பிகள் மீது உராய்ந்து செல்கின்றன. இதனால், பெரும் விபத்து நிகழ வாய்ப்புள்ளது.
இது குறித்து, கூடுவாஞ்சேரி மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மின் கம்பிகளை சரியான உயரத்தில் பொருத்தவும், மின் கம்பிகள் மீது 'இன்சுலேட்டர்' அமைக்கவும், மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
