/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் ஏரிக்கரையில் அத்துமீறி பூங்கா... சர்ச்சை ! கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்
/
புழல் ஏரிக்கரையில் அத்துமீறி பூங்கா... சர்ச்சை ! கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்
புழல் ஏரிக்கரையில் அத்துமீறி பூங்கா... சர்ச்சை ! கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்
புழல் ஏரிக்கரையில் அத்துமீறி பூங்கா... சர்ச்சை ! கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்
ADDED : நவ 14, 2025 10:04 PM

புழல் ஏரி கரையின் கீழ் அமைக்கப்படும் பூங்காவுக்காக, 60க்கும் மேற்பட்ட துாண்களை, சி.எம்.டி.ஏ., அமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கரைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற, அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நீர், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. புழல் ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக, செங்குன்றத்தில் இரண்டு ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் உள்ளன.
பருவ மழை காலங்களில் திறக்கப்படும் உபரி நீர், கால்வாய் வழியே, 11 கி.மீ., பயணித்து சடையங்குப்பம் அருகே வங்க கடலில் கலக்கிறது. பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கை.
இந்நிலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், புழல் ஏரிக்கரையில் கசிவு நீர் தேங்கும் பகுதியில், 8.17 ஏக்கரில், 16.96 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணியை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது. இதற்காக, ஜோன்ஸ் டவர் எதிரே, செம்மண் கரையோரம், 60க்கும் மேற்பட்ட துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு இப்பகுதியில், கரை லேசாக பலமிழந்த நிலையில் நீர் கசிவு ஏற்பட்டது. இதனால், பாதுகாவலர் பகுதியில், சில மீட்டர் துாரத்திற்கு மண் கரையை ஒட்டி கான்கிரீட் தடுப்பு போடப்பட்டது.
பூங்காவுக்கான வேலைகள், கரையின் அருகிலேயே நடக்கின்றன. ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளபோது, செம்மண் வழியாக தண்ணீர் லேசாக வெளியேறும். காற்றில் எழும் அலையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்க, இந்த நீர்கசிவு உதவுகிறது.
பூங்கா பணிக்காக கான்கிரீட் துாண்கள் அமைப்பது, ஏரிக்கரையின் பலத்திற்கு வேட்டு வைக்கும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கரை உடைப்பு ஏற்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'புழல் ஏரி எதிரே, தற்காலிக பேருந்து நிலைய இடத்தில் பூங்காவை கட்டலாம். ஏரியின், 200 மீட்டர் துாரத்திற்குள் கட்டுமானம் நடப்பது பயமாக உள்ளது' என்றனர்.
சென்னை மண்டல நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கசிவு நீர் தேங்கும் இடத்தில் பூங்கா அமைக்க, நீர்வளத்துறையிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். பணிகள் முடிந்ததும் வாங்கி கொள்ளலாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நினைக்கின்றனர்.
ஏரியின் ஷட்டர் மதகை ஒட்டிய இரண்டு பகுதிகளிலும், கான்கிரீட் தடுப்பு சுவர்களை ஒட்டி பூங்கா அமைக்க ஆலோசனை தரப்பட்டது. அதை நிராகரித்துவிட்டு, செம்மண் கரையை ஒட்டி பூங்கா அமைக்கின்றனர். முன்பிருந்த அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இனிமேல் பணியை தடுக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

