மாமூல் கேட்டு மிரட்டிய தி.மு.க., வட்ட செயலர் கைது
மாமூல் கேட்டு மிரட்டிய தி.மு.க., வட்ட செயலர் கைது
ADDED : ஜூலை 03, 2026 01:20 AM
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை மேற்கொள்ள, 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, தி.மு.க., வட்ட செயலரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவொற்றியூர் மஸ்தான் கோவில் சந்திப்பு பகுதியில், 'கே.ஜி பவுண்டேஷன்ஸ்' நிறுவனம், 81 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது.
திருவொற்றியூர் பகுதி தி.மு.க.,வைச் சேர்ந்த எட்டாவது வட்ட செயலரான மணிகண்டன், 39, வீடு ஒன்றிற்கு, 25,000 ரூபாய் வீதம், 81 வீடுகளுக்கு, 20.25 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, கட்டுமான நிறுவனத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மாதவராஜன், 63, புகாரையடுத்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.
கைதான மணிகண்டனின் தாய் ராஜகுமாரி, சென்னை மாநகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயன், இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
