ADDED : மார் 17, 2024 12:35 AM

சென்னை:தொண்டை மண்டல சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா, விடையாற்றி கலை விழா விமரிசையாக நடத்தப்படும்.
இந்த விழாவில் சென்னை, புறநகர் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்வர்.
கபாலீஸ்வரர் கோவிலின் இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
காலை 6:00 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை, பக்தர்களின் சிவநாமம் விண்ணைப் பிளக்க கொடியேற்றம் நடந்தது. பின், பவழக்கால் விமான சேவை நடந்தது.
நேற்று இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜைக் காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகன புறப்பாடும் நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம், இரவு 9:00 மணிக்கு சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 22ல் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப் படுகிறது.
அதேபோல், திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி மாத பெருவிழா கொடியேற்றம், நேற்று இரவு 8:30 மணிக்கு மேல் நடந்தது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதி காலை 6:30 மணிக்கு சந்திரசேகரர் தேர்த்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

