மெட்ரோ பணியால் மாற்றப்பட்ட தடத்தில் மீண்டும் மாநகர பஸ் இயக்க மனு அளிப்பு
மெட்ரோ பணியால் மாற்றப்பட்ட தடத்தில் மீண்டும் மாநகர பஸ் இயக்க மனு அளிப்பு
ADDED : ஜூலை 07, 2026 06:17 AM

வடபழனி: ராயபுரத்தில் இருந்து அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், அசோக் நகர் இரண்டாவது அவென்யூ, 100 அடி சாலை, வடபழனி பேருந்து நிலையம், வளசரவாக்கம், போரூர் வழியாக இயக்கப்பட்டு வந்தன.
ஆற்காடு சாலையில் நடந்தும்வரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக இந்த பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதாவது அசோக் நகர் இரண்டாவது அவென்யூவில் இருந்து 100 அடி சாலையைக் கடந்து, கே.கே., நகர் பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக சாலிகிராமம் ஆற்காடு சாலையை அடைந்து, அங்கிருந்து வளசரவாக்கம், போரூர் நோக்கி செல்கின்றன.
இதில், பி.டி.ராஜன் சாலை - ராஜமன்னார் சாலை சந்திப்பு; ராஜமன்னார் சாலையில் இருந்து 80 அடி சாலை - ஆற்காடு சாலைக்கு திரும்பும் பகுதிகள் குறுகலாக இருப்பதால், அப்பகுதியில் பேருந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
இந்நிலையில், ஆற்காடு சாலையில் நடந்துவந்த மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளதால், அய்யப்பன்தாங்கல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகளை, வடபழனி பேருந்து நிலையம் - ஆற்காடு சாலை வழியாக மீண்டும் இயக்கலாம்.
இதுகுறித்து, சென்னை பெருநகர நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் அரசுக்கும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கும் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்காததால், பேருந்து வழித்தடம் மாற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, விபத்துகளை குறைக்க, பழைய வழித்தடத்தில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.
