/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள்; அ.தி.மு.க., புகார்
/
கோவை மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள்; அ.தி.மு.க., புகார்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள்; அ.தி.மு.க., புகார்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள்; அ.தி.மு.க., புகார்
ADDED : ஜூலை 26, 2024 10:44 PM

கோவை:கோவை மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்கு பின், மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மேயர் பதவியை, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கல்பனா ராஜினாமா செய்ததால், துணை மேயர் வெற்றிச்செல்வன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
வழக்கமாக, ஒவ்வொரு தீர்மானமாக படித்து, அனுமதிக்கலாம் எனக்கூறி, பின்னர் நிறைவேற்றப்படும். நேற்று, 'ஆல் பாஸ்' முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குழு தலைவர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், ''மொத்தம், 333 தீர்மானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து பார்க்க கூட முடியவில்லை. ஊழல், முறைகேடு நடந்திருக்கிறது. கட்டட வரைபட அனுமதி வழங்க, ஆன்-லைன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், சதுரடிக்கு, 44 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 88 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
ஆனால், அவர் கோரிக்கை ஏற்கப்படாமல், தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு, கூட்டம் முடிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், பிரபாகரன் கூறுகையில், ''ஆன்லைன் முறையில் அனுமதி தரும் திட்டம் சமீபத்தில் துவக்கப்பட்டது. இது, இலவசம் என மக்கள் நினைத்தனர். இதற்கு முன் வரைபட அனுமதி பெற, 40,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது; இப்போது, 3 லட்சம் ரூபாய் செலுத்த சொல்கின்றனர். மக்கள் மீது அக்கறையில்லாமல் அரசு செயல்படுகிறது. கடன் பத்திரம் வெளியிடுவதாக கூறியுள்ளனர். மாநகராட்சி திவாலாகி இருக்கிறதா; மத்திய, மாநில அரசுகள் நிதி தருவதில்லையா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கோவை மக்கள் துன்பம் அனுபவிக்கின்றனர்,'' என்றார்.
மேலும், தி.மு.க., நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் விக்டோரியா ஹால் முன் தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.

