ADDED : ஆக 05, 2026 05:52 PM
பேரூர்: சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் சஞ்சய், 25. ஐ.டி., ஊழியர். கிரிண்டர் செயலியில், ஆண் நண்பருடன் பேசி வந்தார். அவர் ஜூலை, 22ம் தேதி, நேரில் சந்திக்க சஞ்சய் வீட்டின் அருகே காரில் வந்தார். சஞ்சய் அவரை சந்திக்க சென்ற போது காரில் சிறிது துாரம் சென்று பேசலாம் என்றார். சஞ்சய் காரில் ஏறிய போது, மேலும் மூவர் இருப்பது தெரிந்தது. காரில் இருந்தவர்கள், சஞ்சயை தாக்கினர். அவரை மாதம்பட்டி, சிறுவாணி மெயின் ரோடு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று, அவர் அணிந்திருந்த, அரை பவுன் செயின், கால் பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டனர். மேலும், அருகிலிருந்து ஏ.டி.எம்., க்கு அழைத்து சென்று சஞ்சயின் வங்கி கணக்கிலிருந்த, ரூ.5,000 பணத்தையும் பறித்தனர். சஞ்சயை தாக்கி, அங்கேயே விட்டுவிட்டு, அவர்கள் தப்பினர்.
புகாரின்பேரில், பேரூர் போலீசார் அவர்களை தேடி வந்தனர். திருப்பூரில் பதுங்கியிருந்த அக்கும்பலை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த ஆத்விக், 27, சக்தி விஜய், 25, ராம் சுந்தர், 24, சுடலைமணி, 26 எனத் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். இக்கும்பல் இதுபோல, பலரையும் ஏமாற்றி, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
