மனிதாபிமானம் ரொம்ப பொங்கினால் வங்கி கணக்கு முடக்கப்படும், உஷார்!
மனிதாபிமானம் ரொம்ப பொங்கினால் வங்கி கணக்கு முடக்கப்படும், உஷார்!
ADDED : ஜூலை 04, 2026 05:37 AM

கோவை: ''நண்பருக்கு நாளை காலையில் இதய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. மருத்துவமனையில் இன்று இரவுக்குள் பணம் கட்டியாக வேண்டும். ஆனால் என் மொபைல்போனில் இருந்து நண்பருக்கு பணம் அனுப்ப இயலவில்லை. 2 லட்சம் ரூபாயும் அவருடைய நம்பரும் தருகிறேன். தயவு செய்து உங்கள் மொபைல் மூலமாக பணத்தை அனுப்பி வைக்க முடியுமா?”
-- இப்படி ஒருவர் கேட்டால், அதெல்லாம் முடியாது என்று சொல்ல உங்களால் முடியுமா?
தெரிந்தவர், தெரியாதவர் எவர் கேட்டாலும் முடியாது என சொல்லும்படி வலியுறுத்துகிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.
“இந்த உதவியை செய்தால், வாழும் வரை உங்களை மறக்க மாட்டேன். என்னுடைய சிறு அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் உங்களுக்கு அனுப்புகிறேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடுத்த கட்டத்துக்கும் போவார்களாம்.
“எப்படி கேட்டாலும் முடியாது என்ற பதிலை மட்டுமே சொல்லுங்கள்” என்கிறது போலீஸ்.
யாரையாவது ஏமாற்றி சைபர் மோசடி வழியில் பறிக்கப்படும் பணம், அதே கணக்கில் நீண்ட நேரம் இருப்பதில்லை. வேக வேகமாக அந்த பணத்தை வெவ்வேறு நபர்களின் கணக்குக்கு அடுத்தடுத்து மாற்றுகின்றனர்.
இதற்கு பெயர் 'லேயரிங்'. இப்படி செய்தால் சுலபமாக மோசடிக்காரனின் கணக்கை கண்டுபிடிக்க முடியாது என அவர்கள் நம்புகின்றனர்.
சுலபமாக இருக்காது. ஆனால் கண்டுபிடிக்க முடியும். பிரச்னை என்ன என்றால், மேலே படித்தீர்களே, அந்த மாதிரி இரக்கப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் யாரெல்லாம் பணத்தை பெற்று, வேறு நம்பருக்கு அனுப்பினார்களோ, அவர்கள் அத்தனை பேரும் போலீசின் சந்தேக வலையில் சிக்குவார்கள்.
அவர்களுடைய வங்கி கணக்கும் முடக்கப்படும். அவர்களின் வீட்டு கதவையும் போலீஸ் தட்டும்.
ஆப்பரேஷன், காலேஜ் ஃபீஸ், குடும்ப நெருக்கடி என எத்தனையோ எமர்ஜென்சி சூழல்களை சொல்லிக் காட்டி மோசடி நடக்கிறது. தெரியாத்தனமாக நீங்கள் சிக்கினால், அந்த குற்றத்தில் உங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
அதை செய்ய பல வாரங்கள், மாதங்கள் ஆகலாம். நிரூபித்த பிறகுதான் போலீசின் சந்தேக நிழல் உங்களை விட்டு விலகும்; வங்கி கணக்கும் திரும்ப உயிர் பெறும்.
ஆகவே...உஷார்!
