வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு
வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 04, 2026 08:28 PM
கடலுார்: வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் நடப்பு ஆண்டிற்கு, கடலுார் மாவட்டத்திற்கு, 91 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 7 ஆண்டுகளுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
அரசின் மற்ற திட்டங்களின் மானியம் பெறும் விவசாயிகளும் திட்டத்தில் பயன்பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பு 10 சதவீதம் செலுத்த வேண்டும்.
அறுவடைக்கு பிந்தைய வேளாண் உட்கட்டமைப்புகளான மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்தல், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், ட்ரோன் வாங்குதல், வேளாண் இயந்திரங்கள், வாடகை மையம் அமைத்தல், பண்ணைக்கழிவு மேலாண்மை சார்ந்த கட்டமைப்பு அமைத்தல், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு மையங்கள் துவங்குதல், மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைத்தல் மற்றும் காளாண் வளர்த்தல் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன்பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தங்கள் பகுதியில் உள்ள வங்கி கிளையில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர் (வே.வ), குத்துாசி குருசாமி சாலை, கடலுார் அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
