அரசு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகள் தேர்வில் கூட்டுறவுத் துறை திணறல்
அரசு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகள் தேர்வில் கூட்டுறவுத் துறை திணறல்
ADDED : ஜூலை 08, 2026 02:57 AM
க டலுார் மாவட்டத்தில் கடன் தள்ளுபடிக்கு தகுதி உடைய விவசாயிகளை தேர்வு செய்வதில் கூட்டுறவுத்துறை ஆய்வுக் குழு அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும், 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு நெல், வாழை, நிலக்கடலை, கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி பயிர் கடன், 1.15 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.818 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதியதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய், கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் கூட்டுறவு வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டும் முழு தள்ளுபடி எனவும், அதற்கு மேல், கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகை தள்ளுபடி என அறிவிப்பு செய்தார்.
இதற்கு விவசாய சங்கங்கள், விவசாயிகள் இடையே பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. மீண்டும் அரசு ஜூன் கடைசி வாரத்தில், 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர் கடன்கள் முழுவதும் (100 சத வீதம்) தள்ளுபடி; அதற்கு மேல், கடன் தொகைக்கு, 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி; என, இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகளின் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு, விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதில் ஏராளமான விதிமுறைகள் வகுத்து, அதன் அடிப்படையில், விவசாயிகள் கடன் குறித்து ஆய்வு செய்து தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
கடலுார் மாவட்டத்திற்கு, ரூ.595 கோடி தள்ளுபடி தொகையாக அரசு நிர்ணயத்துள்ளது. முழு தள்ளுபடி பெறும், 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அசல் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
கடன் தவணை தவறி செலுத்தும் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகை செலுத்த வேண்டி இருந்தால், அதனை கட்டாயம் செலுத்தினால் தான் தள்ளுபடி சான்று வழங்கப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற பயிர்க் கடன்களுக்கு தள்ளுபடி இல்லை.
அதேபோன்று கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பெற்ற கடன்களுக்கும் தள்ளுபடி கிடையாது.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் விவசாயக் கடன் பெற்றிருந்தால், ரேஷன் கார்டு அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். மற்றவர்கள் தள்ளுபடி பட்டியலில் வரமாட்டார்கள். இதில் யார் தொகை குறைவான கடன் தொகையாக உள்ளதோ, அவர்கள் பெயர் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்படுவர்.
நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்யும் குத்தகைதாரர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும். விவசாயிகள் கடந்த, 2025ம் ஆண்டு மே முதல் தேதிக்கு முன், கடன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
கடந்த, பிப்.,28 ம் தேதி, நிலுவைக்கு பின் அரசாணை வெளியிடுவதற்குள் முழுமையாக கடன்தொகை திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. இது போன்ற பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு விவசாயக் கடன் தள்ளுபடி பெற தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விவசாயக் கடன் தள்ளுபடி தகுதி உள்ள விவசாயிகள் பட்டியல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர், துறை அலுவலர் மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் கொண்ட சிறப்பு சரிபார்ப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்திற்கு சென்று, 'ஆப்' தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டு அரசு அறிவித்த விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கான தகுதியான விவசாயிகள் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு தகுதி உடைய விவ சாயிகள் பட்டியல் தயாரிப் பதில் கூட்டுறவுத் துறையினர் குழப்பம் அடைந்து திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் அளவில் முழு தள்ளுபடிக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் குறைந்த தொகை தள்ளுபடி பெறுபவர்களாக இருப்பர்கள் என தெரிய வருகிறது.
அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் அதிருப்பதியில் உள்ளனர்.
