இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு 2161 பேர் எழுதுகின்றனர்
இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு 2161 பேர் எழுதுகின்றனர்
ADDED : ஜூலை 04, 2026 06:09 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு மையங்களில் இன்று (ஜூலை 4) நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை 2161 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடந்தன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வை மாநிலத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.
இன்றும் (ஜூலை 4), நாளையும் (ஜூலை 5) இத்தேர்வு நடக்கிறது. இன்று நடக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை யொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 161 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. காலை 9:00 மணி முதல் தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். முறைகேடுகள் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் நேற்று முன்னேற்பாடு பணிகள் நடந்தன. தேர்வு எழுத வசதியாக இருக்கைகள் அமைத்தல், தேர்வர் எண் எழுதுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
தொடர்ந்து நாளை (ஜூலை 5) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் 4814 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் (பொ) அமுதா துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்தார்.
