'டெட்' தேர்வில் பணிக்காலம், உயர்கல்வி தகுதி அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் அனைத்து ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
'டெட்' தேர்வில் பணிக்காலம், உயர்கல்வி தகுதி அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் அனைத்து ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2026 03:30 AM

திண்டுக்கல்: ''பணிக்காலம், உயர்கல்வி தகுதிகளின் அடிப்படையில் ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
ஜூலை 4ல் ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வு முதல் தாள் தேர்வில் 61 ஆயிரத்து 386 இடைநிலை ஆசிரியர்களும், ஜூலை 5ல் இரண்டாம் தாள் தேர்வில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 667 பட்டதாரி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும் 2010க்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆனது 2010 ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வந்தது. எனவே அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
ஆனால் 2025 ஜூலை 1ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 2010 முன்பே பணியில் சேர்ந்தோரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டியதாயிற்று. இது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
2 தாள்களில் இடம் பெற்ற கேள்விகள் கடுமையான இருந்தன. கேள்விகள் அனைத்தும் குரூப் 1 நியமன தேர்விற்கு கேட்பதை போல் கேட்கப்பட்டிருந்தன.
கடந்த ஆட்சியில் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களானது பொது பிரிவினருக்கு 90, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 75, எஸ்.சி.எஸ்.டி., பிரிவினருக்கு 60 என குறைக்கப்பட்டது.
அரசு அனைவருக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணாக 50 (33 சதவீதம்) ஆக நிர்ணயம் செய்வதன் மூலம் ஆசிரியர்கள் மன உளைச்சல் இன்றி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இயலும்.
2028 ஜூலை வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். பணிக்காலம், உயர்கல்வி தகுதிகளின் அடிப்படையில் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் உடனிருந்தார்.
