பழநி மடம் நில மோசடி பத்திரப்பதிவு மூவரின் ஜாமின் மனு தள்ளிவைப்பு
பழநி மடம் நில மோசடி பத்திரப்பதிவு மூவரின் ஜாமின் மனு தள்ளிவைப்பு
ADDED : ஆக 04, 2026 01:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் ஜாமின் மனு விசாரணையை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நாளை (ஆக., 5) தள்ளிவைத்தது.
இம்மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் விழுப்புரம் மாவட்டம் முருகதாஸ், மோசடியாக நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் வெள்ளைத்துரை, பழநி புதுார் சேதுபதி, பத்திரம் தயாரித்த வழக்கறிஞர் அன்வர்தீனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தலைமறைவாக உள்ளார்.
ஜாமின் வழங்கக்கோரி முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் தரப்பில் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையை ஆக., 5க்கு (நாளை) (பொறுப்பு) நீதிபதி தினேஷ்குமார் தள்ளிவைத்தார்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வர்தீனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் 5 நாட்கள் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
துண்டு பிரசுரங்கள் விநியோகம்
இந்த மோசடி பத்திரப்பதிவு விவகாரத்தில் ஜஸ்டின் மணிகண்டன் பணிபுரிந்த பிற சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்பதை 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. கடந்த மே மாதம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 7 நாட்கள் ஜஸ்டின் மணிகண்டன் பணியில் இருந்ததால் அங்கும் ஆய்வு நடந்தது.
தமிழ்நாடு அக்கப்போர் இயக்கம் சார்பில் வடமதுரையில் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில் 'வடமதுரை சார்பதி வாளர் அலுவலகத்தில் விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் பணி செய்தது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.,யை கைப்பற்றி விசாரிக்க வேண்டும். பதிவுக்கு வாய்மொழி உத்தரவிட்ட மதுரை மண்டல பத்திரப்பதிவு உயரதிகாரியையும் விசாரிக்க வேண்டும்.
அனைத்து பணி மாறுதல் உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். அவர் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.
