அ.தி.மு.க., தலைமையின் நிலைப்பாடு: குழப்பத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள்
அ.தி.மு.க., தலைமையின் நிலைப்பாடு: குழப்பத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள்
UPDATED : ஜூலை 06, 2026 06:15 PM
ADDED : ஜூலை 06, 2026 06:11 PM
அ.தி.மு.க., தலைமையின் நிலை குறித்து திருக்கோவிலுார் தொகுதி நிர்வாகிகளும் தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
திருக்கோவிலுார் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தொகுதியின் 75 சதவீத பகுதி விழுப்புரம் மாவட்டத்துடன் இருக்கிறது.
அரசியல் காரணங்களுக்காக தொகுதியை இரண்டு மாவட்டத்திற்கும் பங்கு போடப்பட்டது. இதன் காரணமாக கட்சியின் சில நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின்றனர்.
அ.தி.மு.க., தலைமையில் நிலவும் குழப்பமான சூழல் காரணமாக திருக்கோவிலுார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் பழனிசாமி வெற்றி பெற்றாலும், கட்சியின் நிலையால் அதனை கொண்டாட முடியாமலும், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்படி என தெரியாமலும், அதிகாரிகளை சந்தித்து தொகுதியில் வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்.
மாவட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் குமரகுரு தனது தொடர் தோல்வியால் நிலைகுலைந்து அமைதி காத்து வருகிறார். இது திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க.,வினரை சோர்வடையச் செய்துள்ளது.
அதே நேரத்தில் கட்சியின் ஒரு சில நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியதில் முதல் ஆளாக இருக்கும் சண்முகத்தின் ஆதரவாளர்கள் என்பதால் இவர்கள் தங்களது ஆதரவை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் அமைதி காத்து வருகின்றனர்.
கட்சியின் நிலை குறித்து புலம்பும் இவர்கள் சண்முகம் எடுக்கும் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான அ.தி.மு.க., தொண்டர்கள், கட்சித் தலைமை இதுவரை அதிருப்தியாளர்களை அழைத்துப் பேசி அரவணைத்துச் செல்ல நடவடிக்கை எதுவும் எடுக்காத நியைலில் இருப்பதால் ஒரு பக்கம் விமர்சித்து மனம் வருந்தினாலும், குழப்ப நிலையில் உள்ளனர்.
