காரில் ரூ.2.10 லட்சம் பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
காரில் ரூ.2.10 லட்சம் பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 09, 2026 02:46 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காரில் வைத்திருந்த ரூ. 2.10 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈ யனுாரை சேர்ந்தவர் செந்தில்குமார், 45; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம், கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் பணம் எடுத்தார். பின்னர் அந்த பணத்தில் ரூ. 5 ஆயிரம் மட்டும் தனது பாக்கெட்டில் வைத்து, மீதமுள்ள ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை ஒரு பையில் வைத்து காரின் முன்பக்கத்தில் வைத்தார்.
கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை முன்பு காரை நிறுத்தி, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் மீண்டும் காரில் வந்து பார்த்தபோது ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.
செந்தில்குமார், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதையும், அதனை காரில் வைத்ததை கவனித்த மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
