முதல் ஆழ்வார்களுக்கு பேரொளியாக திருவிக்ரமன் காட்சியளித்த புண்ணிய ஸ்தலம்
முதல் ஆழ்வார்களுக்கு பேரொளியாக திருவிக்ரமன் காட்சியளித்த புண்ணிய ஸ்தலம்
ADDED : ஜூலை 04, 2026 05:42 AM
மு தல் ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ஆகும்.
இம்மூவரும் தனித்தனியாக பல திவ்யதேசங்களை கடந்து ஒருநாள் இரவு திருக்கோவிலுாரை வந்தடைந்தனர். மூவரையும் ஒன்று சேர்க்க எண்ணிய பெருமாள், பெருமழையை பெய்யச் செய்தார். மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்த பொய்கை ஆழ்வார், 'இரவு தங்குவதற்கு இடமுண்டோ' எனக் கேட்டார். முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி, 'ஒருவர் படுக்கலாம்' என்றார்.
பூதத்தாழ்வார் அங்கு வந்து இடம் கேட்க, இருவர் இருக்கலாம் என தெரிவித்து உள்ளே அழைத்துக் கொண்டார். மூன்றாவதாக பேயாழ்வார் வந்து இடம் கேட்க, 'மூவர் நிற்கலாம்' என முனிவர் கூற மூவரும் நின்று கொண்டனர். மழை பெய்யும் கும்மிருட்டில் நான்காவதாக பகவான் அந்த அரையில் நுழைந்து நெருக்க மூவரும் திகைத்து நின்றனர். பகவான் தன் பேரொளியால் திருவிக்ரமனாக காட்சியளித்தார்.
ஆழ்வார்கள் மூவரும் தனது ஞானக்கண்ணால் கண்டுகளித்து 'வையந்தகளியா' என பொய்கையாழ்வாரும், 'அன்பே தகளியா' என பூதத்தாழ்வாரும், 'திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்' என பேயாழ்வாரும் தலா நுாறு பாசுரங்களை தமிழில் பாடி மகிழ்ந்த பெருமை இத்தலத்திற்கு உண்டு. மிருகண்ட முனிவரும் பிரம்மா கூறியது போல் திருவிக்ரம கோலத்தை கண்டு மகிழ்ந்தார்.
