ADDED : ஜூலை 04, 2026 06:14 AM

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் புராதான இதிகாசங்களில் இடம்பெற்ற மிகப் பழமையான திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. பல சிறப்புகளை உள்ளடக்கியை கோவிலை பல மீட்டருக்கு அப்பால் அடையாளம் காட்டும் வகையில் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் தனி சிறப்புடன் விளங்குகிறது.
பதினோரு நிலைகளுடன், 192 அடி உயரத்திற்கு கம்பீரமாக உள்ளது. இது தமிழகத்தில் நான்காவது பெரிய கோபுரமாகும். ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு அடுத்தபடியாக திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் இடம்பெறுகிறது.
இதனை கட்டியவர் யார் என தெரியவில்லை. என்றாலும், ஒன்பது மற்றும் பத்தாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது கோவில் கோபுரமாக மட்டும் இல்லாமல், அரசர்களின் கோட்டை நுழைவு வாயிலாகவும் இருந்துள்ளது.
கோபுரத்தின் இரண்டு பக்கத்திலும் கோட்டை மதில் சுவர்க்கான அடித்தளம் இன்றளவும் கம்பீரமாக பூமியில் புதைந்துள்ளது. இதனை தொல்லியல் துறையும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது.
பெரிய கோபுரம், கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், வடக்கு ராஜகோபுரம் என 4 கோபுரங்கள் உயர்ந்து நின்று நகருக்கு அழகையும் பெருமையும் சேர்ப்பதால், திருக்கோவிலுாரை, கோவிலுார் என்றும் அழைக்கின்றனர்.
