ADDED : ஜூன் 30, 2026 11:58 PM
திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் பெரிய ஏரியில் நீர் நாய்கள் உலா வருகிறது.
நீர் நாய்கள், சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் உள்ளது. மிகவும் அரிதாக தென்படும் இவ்வகை நீர் நாய்கள், திருக்கோவிலுார் பெரிய ஏரியில் கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது. ஏரியில் 5 க்கும் மேற்பட்ட நீர் நாய்கள், தேங்கி இருக்கும் ஏரி தண்ணீரில் மூழ்கி எழுந்தபடி செல்கிறது.
இதனை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அவை வைரலாக பரவி வருகிறது.
நீர் நாய்கள், மீன்களை வேட்டையாடக் கூடியது என்பதால், ஏரியில் மீன் வளர்ப்பு, மீன் பெருக்கத்தை இது பெருமளவில் பாதிப்பதாக கூறி, சிலர் நீர் நாய்களை வேட்டையாட முயல்வதாக புகார் கூறப்படுகிறது.
கடந்தாண்டு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில், நீர் நாய்கள் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
எப்போதும் வற்றாமல் நீர் நிறைந்திருக்கும் திருக்கோவிலுார் பெரிய ஏரி, இதன் சுற்றுச்சூழலுக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்றது என்பதை உணர்ந்து, ஏரியில் தங்கியிருக்கலாம் என விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஏரியில் நீர் வடிந்த நிலையில் தென்படும் நீர் நாய்களை வேட்டையாடத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து, அதனை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
