4 ஆண்டுகளில் 30 பேறுகால மரணங்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை
4 ஆண்டுகளில் 30 பேறுகால மரணங்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை
ADDED : ஜூலை 03, 2026 03:20 PM
காஞ்சிபுரம், ஜூலை 4-–
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில், பேறுகாலத்தில், 30 பெண்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கர்பிணியருக்கு பிரசவம் நடைபெறுகிறது. அவ்வாறு, பிரசவம் நடைபெறும்போதோ அல்லது அடுத்த சில நாட்களிலோ தாய் இறப்பதை, பேறுகால தாய் மரணம் என்கின்றனர்.
பேறுகால மரணங்களை குறைக்க வேண்டும் என, சுகாதாரத்துறை முயற்சிக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் சில மரணங்கள் நடந்தபடியே உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2022 முதல் 2026 வரை நான்கு ஆண்டுகளில் பேறுகாலம் தொடர்பாக, 30 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 2022–-23 ல், 10 பேரும், 2023-– 24 ல் 7 பேரும், 2024-– 25 ல் 6 பேரும், 2025-– 26 ல், 7 பேர் என, மொத்தம் 30 பெண்கள் இறந்துள்ள மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு மருத்துவ சேவைகள் விரிவடைந்து, மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரித்துள்ள நிலையிலும் தாய் மரணங்கள் தொடர்வது, தாய்-சேய் நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணியருக்கு உரிய காலகட்டங்களில் பரிசோதனை மேற்கொள்வது, உயர் ஆபத்துள்ள கர்ப்பங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, தேவையான சிகிச்சை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகள் தாய்மரணத்தைத் தடுக்க முக்கியமானதாகும்.
இருப்பினும், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், அதிக ரத்தப்போக்கு, கர்ப்பகால சிக்கல்கள், தாமதமாக மருத்துவமனைக்கு வருதல், ஏற்கனவே இருந்த உடல்நலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்னும் தாய் மரணங்களுக்கு வழிவகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க சுகாதார துறை முன்வர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
