மாத்துாரில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அணுகு சாலையில் கழிவுகள் கொட்டி அட்டூழியம்
மாத்துாரில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அணுகு சாலையில் கழிவுகள் கொட்டி அட்டூழியம்
UPDATED : ஜூன் 11, 2026 04:07 PM
ADDED : ஜூன் 11, 2026 04:01 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, மாத்துார் அணுகு சாலையோரம் கொட்டப்பட்டும் கோழி இறைச்சி கழிவு மற்றும் குப்பைகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் மாத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. ஒரகடம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரியும், ஆயிரக்கணக்கான ஊழியர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் கொட்டி குவிக்கப்படுகின்றன.
அதேபோல, வல்லக்கோட்டை, மாத்துார் பகுதியில் இயங்கிவரும் 10க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளை, இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர்.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், குப்பையில் உணவு தேடி வரும் கால்நடைகள் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
