பாதாள சாக்கடையில் அடைப்பு ;கோவிலை சூழ்ந்த கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு ;கோவிலை சூழ்ந்த கழிவுநீர்
UPDATED : ஜூலை 06, 2026 05:36 PM
ADDED : ஜூலை 06, 2026 05:31 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெரு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கமலக்கண் விநாயகர் கோவிலை சுற்றி கழிவுநீர் தேங்கி உள்ளதை அகற்ற வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், அரசு தொடக்கப் பள்ளி, மின்வாரிய துணை மின் நிலையம், திரவுபதியம்மன், கங்கையம்மன், கமலக்கண் விநாயகர் கோவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஏகாம்பரநாதர் கோவில், கருப்படிதட்டடை, ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர் கமலக்கண் விநாயகர் கோவில் வாசலில் தேங்கி நிற்கிறது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பஞ்சுபேட்டை பெரிய தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
