அமராவதி அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கக்கோரி சாலை மறியல் போராட்டம்
அமராவதி அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கக்கோரி சாலை மறியல் போராட்டம்
ADDED : செப் 02, 2026 06:58 AM
கரூர்:''அமராவதி அணை யில் இருந்து, ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,-தி.மு.க.,வினர் மற்றும் விவசாயிகள், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என, நேற்று கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஒத்தமாந்துறையில் அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க., மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி மற்றும் பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதாக நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை, சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு மதியம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
அமராவதி அணையில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கரூர் மாவட்ட கடைமடை பகுதி வரை செல்லாது. குடிநீர் பஞ்சம் தொடங்கி விட்டது. கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை. எனவே, 3,000 கன அடி தண்ணீர் வரை திறக்க வேண்டும். அப்போது தான், விவசாயம், குடிநீருக்கு பயன்படும். தண்ணீர் திறக்கவில்லை என்றால், விவசாயிகள், பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து, காலம் கடந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், முன்கூட்டியே தண்ணீரை திறக்க, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், டெல்டா பாசன பகுதிக்கு போய் சேருமா என தெரியவில்லை.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பகுதி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், கரூர் புகழூர் பகுதி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. அந்த பகுதிகளில், வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதை, கரூர் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
