ADDED : ஜூலை 01, 2026 01:45 AM

மதுரை: கொலை உள்ளிட்ட 23 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சபாரத்தினம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாடக்குளம் பிரதான சாலையில் 2020 அக்.25 ல் ஒரு காரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சோதனை நடத்தினர். ஆந்திராவிலிருந்து கடத்திய 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரை சபாரத்தினம் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிந்தனர். விசாரித்த போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றம் 2024 பிப்.29ல் சபாரத்தினத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் மவுசிகா: மனுதாரர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 7 கொலை வழக்குகள். மனுதாரர் தலைமையில் ஒரு குழு, மற்றொரு குழு வெள்ளைக்காளி தலைமையில் செயல்படுகிறது. இக்குழுக்கள் மதுரையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவை. மனுதாரரை ஜாமினில் விடுவித்தால் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள பிற வழக்குகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போகக்கூடும். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 'ஏ' பிளஸ் குற்ற சரித்திர பதிவேடு பின்னணி கொண்டவர். மனுதாரரும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாறி, மாறி தலைமறைவாகி வருகின்றனர். விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. மனுதாரருக்கு ஜாமின் அனுமதித்தால் அவர் மற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் போகக்கூடும் என போலீசார் கொண்டுள்ள அச்சம் நியாயமானது.
மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள், அவர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது நீதிமன்றங்களின் கடமை. அதேவேளையில், கொலை வழக்குகளில் மனுதாரர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்களாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பொறுப்பாக வேண்டிய நிலையில் நீதிமன்றங்கள் உள்ளன. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
