பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூல் மதுரையில் 'குடிமகன்' மறியல்
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூல் மதுரையில் 'குடிமகன்' மறியல்
ADDED : ஜூலை 01, 2026 01:39 AM

மதுரை: மதுரையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்பட்டதை கண்டித்து போதை நபர் ரோட்டின் நடுவே 'பேரிகார்டை' வைத்து மறியலில் ஈடுபட்டார்.
மதுரை திருநகர் - - தனக்கன்குளம் மாநில நெடுஞ்சாலையில் அரசு மதுக்கடை உள்ளது. த.வெ.க., ஆட்சியில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவது இல்லை என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறி வரும் நிலையில், இந்த மதுக்கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமுற்ற மதுபிரியர், நேற்று மாலை போதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரால் வைக்கப்பட்டிருந்த 'பேரிகார்டை' ரோட்டின் நடுவே இழுத்து வந்து மறியலில் ஈடுபட்டு அரசுக்கு எதிராகவும், கடை ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டார்.
பள்ளி வாகனங்கள் நீண்டநேரம் காத்திருந்ததால் மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர். போக்குவரத்து கடுமையாக பாதித்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போதை நபரை கண்டித்ததோடு 'பேரிகார்டை' நகர்த்தினர். அப்போது அவர்களுடனும் போதை நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரிக்கின்றனர்.
