/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மரக்கன்றுகளை நடவு செய்யும் அரசு அதிகாரி
/
மரக்கன்றுகளை நடவு செய்யும் அரசு அதிகாரி
ADDED : டிச 02, 2025 06:27 AM

பேரையூர்: 'தனது வேலையை செய்தோமா... மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கினோமா... குடும்பத்தை கவனித்தோமா.... என வழக்கமான அரசு அதிகாரியாக இல்லாமல், தனது சொந்தச் செலவில் மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்து அசத்தி வருகிறார் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக் குமார்.
இவர் மகாக்கனி, திது, புங்கை, மந்தாரை, பலா, புளியமரம், வேம்பு, தேக்கு, செம்மரம், அரசமரம், மருது, தகரை உள்ளிட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி 15 நாட்களாக பேரையூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் நடவு செய்து வருகிறார். இப்பணிகளை அவரே நேரடியாக கண்காணிக்கிறார். அத்துடன், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்குகிறார்.
அவர் கூறியதாவது: மரம் வளர்ப்பது குறித்து முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பேரையூரில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் முதற் கட்டமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து பணியாற்றி வருகிறேன். 250 பனை விதைகளை தேனியில் இருந்து வாங்கி அதையும் நடவு செய்து வருகிறேன். நடவு செய்ததோடு நில்லாமல் அவற்றை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

