அரசுப் பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கல
அரசுப் பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கல
UPDATED : ஜூலை 06, 2026 06:27 PM
ADDED : ஜூலை 06, 2026 06:22 PM

மதுரை: மதுரையில் பெரும்பாலான ஒன்றியங்களில் அரசுப் பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளமும், சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் 200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், ஒப்பந்தம் அடிப்படையில் துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடக்க, நடு, மேல்நிலை பள்ளிகளில் முறையே ரூ.1,000, ரூ.2200, ரூ.3 ஆயிரம் என சம்பளம் வழங்கப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் அரசு வழங்குகிறது.
இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு இருந்தாலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மொத்தமாக வழங்கப்படுகிறது. அதற்கிடையே அவர்கள் வாழ்வாதாரம் கருதி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் சொந்தப் பணத்தை கொடுத்து உதவுவர். சம்பளம் வழங்கிய பின் அதை அவருக்கு திருப்பிக் கொடுத்து விடுவர். இந்த நடைமுறை பெரும்பாலான பள்ளிகளில் உள்ளன.
மாவட்டத்தில் மேலுார் கல்வி ஒன்றிய பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு 8 மாதங்களாகவும், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சேடபட்டி, உசிலம்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட ஒன்றிய பள்ளிகளில் 6 மாதங்களுக்கு மேலாகவும் சம்பளம் வழங்கவில்லை.
கலெக்டர் கவனிப்பாரா பாதிக்கப்பட்ட துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: ஊராட்சி ஒன்றியங்களுக்கு அரசு பணம் வழங்கினாலும் உரிய நேரத்தில் எங்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை. தற்போது பழைய சம்பளத்தில் ரூ.1500, ரூ. 3,250, ரூ.4 ஆயிரம் என சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே தற்போது பொதுமாறுதல் கலந்தாய்வில் தலைமையாசிரியர் வேறு பள்ளிகளுக்கு பணிமாறுச் செல்ல உள்ளனர். அதற்குள் நிலுவை சம்பளம், சம்பள உயர்வை கிடைத்தால் தேவையான நேரத்தில் எங்களுக்கு உதவி செய்த தலைமையாசிரியர்களின் கடனை திருப்பி அடைத்த திருப்தி எங்களுக்கு ஏற்படும். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
