மாரியம்மன் தெப்பக்குளம் கடைகளில் கூடுதலாக குத்தகை கட்டணம் வசூல் ரூ.64 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததை ஈடுகட்ட முயற்சி
மாரியம்மன் தெப்பக்குளம் கடைகளில் கூடுதலாக குத்தகை கட்டணம் வசூல் ரூ.64 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததை ஈடுகட்ட முயற்சி
ADDED : ஜூலை 08, 2026 04:08 AM

மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள தற்காலிக உணவு உள்ளிட்ட கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையின் நிரந்தர பொழுதுபோக்கு மையமாக மாறிவிட்ட மாரியம்மன் தெப்பக்குளத்தில் அனைத்து வகை உணவுகளும், குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் களைகட்டுகின்றன. விடுமுறை, பண்டிகை நாட்களில் இங்கு திருவிழா கூட்டம் தான். தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ரோடுகள் மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்குரியவை. இதனால் முக்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் ரோடுகளில் நுாற்றுக்கணக்கான தற்காலிக கடைகளில் குத்தகை வசூலிக்க ஆண்டுதோறும் கோயில் நிர்வாகம் ஏலம் விட்டு வருகிறது.
கடந்தாண்டு ரூ.34 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. திறந்தவெளி கடைக்கு ரூ.30, நடமாடும் கடைகளுக்கு ரூ.50 என கோயில் நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்தது. ஆனால் ஏலம் எடுத்தவரால் கடைகளில் வாரம் ரூ.1300 வரை ரசீது தராமல் குத்தகை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், மாரியம்மன் கோயில் ரோட்டில் 16 கால் மண்டபம் அருகே கடைகள் அமைக்கக் கூடாது. அதற்கு பதில் தியாகராஜர் பள்ளி ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதிகளில் அமைக்கலாம் என தெரிவித்தது.
இந்நிலையில் த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும் கடந்த மாதத்துடன் தி.மு.க., ஆட்சியில் எடுத்த குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. புதிதாக ஏலம் விடப்பட்டது. இம்முறை த.வெ.க., ஆதரவுடன் ஒருவர் அதிகபட்சமாக ரூ.64 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். தற்போது இவரது தரப்பினர் குத்தகை வசூலிக்கின்றனர்.
திறந்தவெளி கடைக்கு ரூ.50, நடமாடும் கடைக்கு ரூ.100 வசூலிக்க ஏல விதிமுறைகள் உள்ள நிலையில், தினமும் ரூ.200, ரூ.300 வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரசீதும் தருவதில்லை. கூடுதல் கட்டணம் கேட்டது தொடர்பாக வியாபாரிகள், போலீசில் புகார் செய்துள்ளனர்.
கோயில் தரப்பில் கேட்டபோது, 'ஏலத்தில் ரூ.64 லட்சத்திற்கு எடுத்ததை ஈடுகட்ட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. விதிமுறையை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். இதுகுறித்து ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தப்படும்' என்றனர்.
